தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு

இஸ்லாத்தின் பெயரால் நாம் எந்தக்
காரியத்தைச் செய்வதாக
இருந்தாலும் அக்காரியம்
திருக்குர்ஆனிலும் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும்
உள்ளபடி அமைந்திருக்க வேண்டும்.
திருக்குர்ஆனிலும் நபிவழியிலும்
இல்லாத காரியங்கள் இஸ்லாத்தின்
காரியங்களாக இருக்க முடியாது.
தொழுகை உள்ளிட்ட அனைத்து
வணக்க முறைகளையும் நமக்குக்
கற்றுத் தருவதற்காகவே நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்
அனுப்பினான். அவர்களும் தமது
பணியில் எந்தக் குறைவும்
வைக்காமல் முழுமையாக நமக்குச்
சொல்த் தந்தார்கள். அவர்கள் உயிருடன்
வாழும் போதே இம்மார்க்கத்தை
இறைவன் முழுமைப்படுத்தி
விட்டான்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை
உங்களுக்காக நிறைவு செய்து
விட்டேன்.
அல்குர்ஆன் 5:3
'நமது கட்டளையில்லாமல் எந்தச்
செயலையேனும் யாரேனும்
செய்தால் அது நிராகரிக்கப்படும்'
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (3243)
எனவே நமது தொழுகை
முறையும் நபிகள் நாயகம் (ஸல்)
காட்டித் தந்த வழியில் மட்டுமே
அமைய வேண்டும். நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் இப்படித் தான்
செய்தார்கள் என்பது தெளிவாகத்
தெரியும் போது அதற்கு
மாற்றமாக எவ்வளவு பெரிய
மேதைகள், இமாம்கள் கூறினாலும்
அவற்றை நாம் நிராகரித்து விட
வேண்டும்.
மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)
தலைமையில் வெளியூர்
இளைஞர்கள் இஸ்லாத்தை ஏற்க வந்தனர்.
அவர்களை 20 நாட்கள் தம்முடன் தங்க
வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
அவ்விளைஞர்கள் திரும்பிச்
செல்லும் போது,
'என்னை எவ்வாறு தொழக்
கண்டீர்களோ அவ்வாறே நீங்களும்
தொழுங்கள்' எனக் கூறி
அனுப்பினார்கள்.
நூல்: புகாரி 631, 6008, 7246
நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய
வழியில் மட்டும் தான் நமது
தொழுகை அமைந்திருக்க
வேண்டும் என்பதை இதிருந்து
அறியலாம்.
புனித மிக்க ரமலான் மாதத்தில்
மக்கள் பேரார்வத்துடன் தராவீஹ்
தொழுகை' என்ற பெயரில் இருபது
ரக்அத் தொழுவதை வழக்கமாகக்
கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு ரமலான் மாதத்திலும்
தமிழகத்தின் பல ஊர்களில்,
இத்தொழுகை குறித்த கருத்து
வேறுபாடு காரணமாக
முஸ்லிம்கள் மத்தியில் சண்டைகள்
நடந்து, காவல் நிலையங்களில்
வழக்குகளும் பதிவாகும்
வேதனையளிக்கும் நிகழ்ச்சிகள்
நடந்து வருகின்றன.
இஸ்லாத்தின் உண்மை நிலையை
குர்ஆன் மற்றும் நபிவழியில் தக்க
ஆதாரங்களுடன் அறிந்து கொண்டால்
இந்த வேண்டாத நிகழ்வுகளைத்
தவிர்க்க இயலும்.
தராவீஹ் என்ற சொல்லே இல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத
பல்வேறு தொழுகைகளும்,
அவற்றுக்கான பெயர்களும் ஹதீஸ்
நூல்களில் தெளிவாகக்
கூறப்பட்டுள்ளன.
இரவில் தொழப்படும்
தொழுகைக்குப் பல பெயர்கள்
சூட்டப்பட்டுள்ளன.
1. ஸலாத்துல் லைல் (இரவுத்
தொழுகை)
2. கியாமுல் லைல் (இரவில்
நிற்குதல்)
3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை)
4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும்
தொழுகை)
ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில்
காணப்படுகின்றன.
ஆனால் தாரவீஹ் என்ற சொல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
பயன்படுத்தியதாகவோ, தராவீஹ்
என்ற தொழுகையை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் தொழுததாகவோ
ஹதீஸ் நூற்களில்
குறிப்பிடப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
இரவுத் தொழுகையை நாம் ஆய்வு
செய்தால் ரமளானிலும் ரமளான்
அல்லாத காலங்களிலும் ஒரே
மாதிரியாகத் தான் தொழுதுள்ளனர்
என்பதை அறியலாம்.
மற்ற மாதங்களில் இரவுத் தொழுகை
தொழுவதற்கு மக்களுக்கு அவர்கள்
ஆர்வமூட்டியதை விட ரமளானில்
அதிக ஆர்வமூட்டியுள்ளனர்.
தஹஜ்ஜுத் எனும் இரவுத்
தொழுகையை மற்ற நாட்களில்
தொழாதவர்கள் ரமளானிலாவது
தொழுது நன்மையை அடைந்து
கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
ரமளானில் யார் நின்று
வணங்குகிறாரோ அவரது முன்
பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது
நபிமொழி.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 37, 2008, 2009
'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் தொழுகை
எவ்வாறு இருந்தது?' என்று
ஆயிஷா (ரலி) அவர்களிடம்
கேட்டேன். அதற்கு அவர்கள்,
'ரமாளானிலும், மற்ற
மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு
மேல் அதிகமாக்கியதில்லை.
நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்.
அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப்
பற்றியும் கேட்காதே! பின்னர்
நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்.
அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப்
பற்றியும் கேட்காதே! பின்னர்
மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்'
என்று விளக்கம் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)
நூல்: புகாரீ 1147, 2013, 3569
ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை
பற்றி அபூ ஸலமா கேள்வி
கேட்கிறார். அவரது கேள்வியே
ரமளானில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் தொழுகை எவ்வாறு
இருந்தது என்பது தான். அவர் ரமளான்
தொழுகை பற்றியே கேள்வி
கேட்டிருந்தும் ஆயிஷா (ரலி)
அவர்கள், ரமளானிலும் ரமளான்
அல்லாத மாதங்களிலும் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் பதினொரு
ரக்அத்களுக்கு மேல்
தொழுததில்லை' என்று
விடையளிக்கிறார்கள்.
எனவே ரமளானில் தொழுவதும்
தஹஜ்ஜுத் தொழுகை தான்.
ரமளானுக்குத் தனித் தொழுகை
இல்லை. மற்ற மாதங்களில் தொழும்
அதே தஹஜ்ஜுத் தொழுகை தான்
ரமளானிலும் உள்ளது என்று
தெள்ளத் தெளிவாக, நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் இரவுத்
தொழுகையை நன்கு அறிந்த
அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி)
அவர்களே அறிவித்து விட்டனர்.
ரமளானில் சிறப்புத் தொழுகை
இல்லை என்று ஆயிஷா (ரலி)
தெரிவித்த பின் தராவீஹ்
தொழுகையை எங்கிருந்து
கண்டுபிடித்தார்கள்?
தஹஜ்ஜத் வேறு, தராவீஹ்
வேறு என்ற வாதம்
ரமளானிலும் மற்ற மாதங்களிலும்
ஒரே தொழுகை தான் என்று நாம்
மேற்கண்ட ஆதாரத்தையும்,
ரக்அத்களின் எண்ணிக்கை என்ற
தலைப்பில் எடுத்துக் காட்டவுள்ள
ஆதாரங்களையும் கண்ட பின்
உண்மையை ஒப்புக் கொள்ள
மறுக்கின்றனர். தராவீஹ் வேறு,
தஹஜ்ஜத் வேறு என்ற விசித்திரமான
வாதத்தை முன் வைக்கின்றனர்.
தஹஜ்ஜுத் என்பது எல்லா நாட்களும்
தொழ வேண்டிய தொழுகையின்
பெயர். ரமளான் மாதத்தில் தஹஜ்ஜுத்
தொழுகையுடன் தராவீஹ் என்ற
மற்றொரு தொழுகை உண்டு;
எனவே தஹஜ்ஜுத்துக்கான
ஆதாரத்தை தராவீஹ் தொழுகைக்கு
ஆதாரமாகக் காட்ட வேண்டாம்
எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
எனவே இது பற்றியும் விரிவாக
நாம் விளக்க வேண்டியுள்ளது.
தஹஜ்ஜுத் வேறு, தராவீஹ் வேறு
என்பதற்கு ஆதாரம் இருந்தால் அதை
முதலில் ஏற்பவர்களாக நாம்
இருப்போம்.
தஹஜ்ஜுத் வேறு, தராவீஹ் வேறு
என்று வேறுபடுத்திக் கூறக்
கூடியவர்கள் தராவீஹ்
தொழுகைக்கான ஆதாரத்தை
எடுத்துக் காட்ட வேண்டும். உலகம்
அழியும் வரை இத்தகைய
ஆதாரத்தை அவர்களால் எடுத்துக்
காட்டவே இயலாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தஹஜ்ஜுத் தொழுது விட்டு
ரமளான் மாதத்தில் மேலும் 20
ரக்அத்கள் தொழுதார்கள் என்று
ஆதாரத்தைக் காட்டாத வரை இந்த
வாதத்தை அறிவுடையோர் ஏற்க
மாட்டார்கள்.
நாங்கள் ரமளான் மாதத்தின் இருபத்தி
மூன்றாம் இரவில் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில்
ஒரு பகுதி வரை தொழுதோம்.
பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில்
இரவில் பாதி வரை தொழுதோம்.
பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர்
உணவு தவறிவிடும் என்று
நினைக்கும் அளவுக்குத்
தொழுதோம்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்
(ரலி)
நூல்: நஸயீ 1588
இதே கருத்து அபூதாவூத் 1167,
இப்னுமாஜா 1317, அஹ்மத் 20450
ஆகிய நூற்களிலும் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
இரவில் தொழ ஆரம்பித்து, ஸஹர்
கடைசி வரை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் ஒரு தொழுகையைத் தான்
தொழுதுள்ளனர் என்பது
இதிலிருந்து தெளிவாகிறது.

Comments