1 அல் அகீதா – கொள்கை விளக்கம்



بسم الله الرحمن الرحيم
அல் அகீதா கொள்கை விளக்கம்
ஒரு முஸ்லிம் எவற்றை உள்ளத்தினால் ஏற்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமோ அவற்றை அகீதா சார்ந்த அம்சங்கள்என்று கூறலாம். அந்த அடிப்படையில் ஒருவன் முஃமினாக மாறவேண்டுமானால் அவன் ஆறு விடயங்களை நம்பி உள்ளத்தினால் ஏற்றாகவேண்டும்.
எனவே ஈமானின் அம்சங்களை உள்ளத்தால் ஏற்று, நாவினால் மொழிந்து, வாழ்க்கையில் அமூல்படுத்துபவனே உண்மை முஃமினாக, முஸ்லிமாக கணிக்கப்படுவான்.
ஈமானின் அம்சங்கள் ஆறு:
அல்லாஹ்வை நம்புவது,
மலக்குமார்களை நம்புவது,
வேதங்களை நம்புவது,
தூதர்களை நம்புவது,
மரணத்தின் பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது என்று மறுமையை நம்புவது,
நல்லதும் கெட்டதும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்று கலாகத்ரை நம்புவது.

  • (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்என்று கூறுகிறார்கள். (2:285)
  • முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.  (4:136)
  • புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்……..       ( 2:177)
  • நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.  (54:49)
  • உமர்(றழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபிகளாரோடு வீற்றிருந்தபோது, ஒரு நாள் கறுப்பு நிற கொண்டையைக் கொண்டவரும் கடும் வென்னிற ஆடையும் அணிந்த ஒரு மனிதர் எங்களிடம் வந்தார். அவரிடம் பயண அறிகுறியும் தென்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரை தெரியாது.அவர் நபிகளாரின் முலங்கால்கலோடு தனது முலங்காலை சேர்த்து, தனது முன் கையை அவர்களது தொடையில் வைத்தவராக அமர்ந்து, “முஹம்மதே இஸ்லாத்தைப்பற்றி எனக்கு சொல்லித்தாருங்கள்என்றார். அதற்கு நபியவர்கள்: இஸ்லாம் என்பது; வணங்கத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் என்பவர் அல்லாஹ்வின் தூதர் என்று நீர் சாட்சி சொல்வதும், தொழுகையை நிலைநாட்டுவதும், ஸகாத்தை நீர் கொடுப்பதும், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சக்தியிருந்தால் இறை வீட்டை நாடிச்சென்று ஹஜ் செய்வதுமாகும்என்று கூறினார்கள். அப்போது வந்தவர் நீர் உண்மையை கூறிவிட்டீர்.என்று கூறினார். உமர் (றழி) அவர்கள் கூறினார்கள்: அவரே கேள்வியையும் கேட்டுவிட்டு, உண்மைப்படுத்துவதைப் பார்த்து நாங்கள் ஆச்சர்யப்பட்டோம். மேலும் வந்தவர், ‘எனக்கு ஈமானைப் பற்றி சொல்லித்தாருங்கள் என்று கேற்க, நபியவர்கள்: அல்லாஹ்வையும், அவனது மலக்குமார்களையும் (அமரர்கள்), அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும் நீர் நம்புவதும், நலவு கெடுதி அனைத்தும் விதியின் அடிப்படையில் (அல்லாஹ்வின் ஏற்பாட்டில்) நடக்கின்றது என்று நம்புவதுமாகும்.என்று கூற, அவர் உண்மையை சொல்லிவிட்டீர்.என்று குறிவிட்டு, இஹ்ஸானைப் பற்றி சொல்லித்தாறுங்கள் என்றார். அதற்கு நபியவர்கள்: நீர் அல்லாஹ்வை பார்ப்பது போன்றும், நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்க்கின்றான் என்ற சிந்தணையோடு அவனை வணங்குவதாகும் என்று கூறினார்கள். மேலும் வந்தவர், ‘மறுமை வரும் நேரத்தைப் பற்றி சொல்லித்தாருங்கள் என்றார். அதற்கு நபியவர்கள்; கேள்வி கேற்பவரைவிடவும் கேற்கப்பட்டவர் அறிந்தவராக இல்லை.என்று கூறியதும், அதன் அடையாளங்களை கூறுங்கள் என்றார் வந்தவர், அதற்கு நபியவர்கள்: ஒரு தாய் தன்னை ஆள்பவளைப் பெற்றெடுப்பது, மேலும் பாதணியில்லாத நிர்வானிகளான ஏழைகள் கட்டிடம் கட்டுவதில் போட்டி போடுவதை நீர் காணுவீர்.என்று கூறியதும் அவர் திறும்பிப் போய்விட்டார். பிறகு நான் அவ்விடத்தில் சிறிது நேரம் தாமதித்து நின்றேன். பிறகு நபிகளார் என்னிடம், ‘உமரே கேள்வி கேட்டவர் யார் என்று உமக்குத் தெரியுமா?, என்றார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கு அறிந்தவர்கள்.என்றேன். அதற்கு நபியவர்கள் அவர்தான் ஜிப்ரீல், உங்களுக்கு மார்க்கத்தை கற்றுத்தருவதற்காக உங்களிடம் வந்தார் என்று கூறினார்கள்.  (முஸ்லிம்)
ஈமானை வெளிப்படுத்தும் நோக்கில் ஒரு முஸ்லிம் மொழியும் வார்த்தையே சுறுக்கமாக
لاإله إلاالله محمدرسول الله
என்பதும், விரிவாக
أشهد أن لاإله إلا الله وحده لاشريك له وأشهد أن محمدا عبده ورسوله
என்பதாகும்.
இதை கூறியபின் ஒருவன் முஸ்லிமாக கணிக்கப்படுவான்.
ஈமான் என்பது இந்த ஆறு விடயங்களை அடிப்படையாக கொண்டிருப்பதோடு, எழுபது செச்சம் கிளைகளையும் கொண்டிருக்கின்றது. இது உள்ளத்தில் உள்ள ஈமானுக்கும் உறுப்புக்களில் வெளிப்படுவதற்கும் உள்ள தொடர்ப்பைக் காட்டுகின்றது.
  • நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது எழுபது அல்லது அறுபது செச்சம் கிளைககளைக் கொண்டது. அவற்றில் மிகச் சிறந்ததுلاإله إلااللهஎன்று சொல்வதாகும். அவற்றில் மிகக்குறைந்தது பாதையைவிட்டு நோவினை தருபவற்றை அகற்றுவதாகும். வெட்கம் என்பதும் ஈமானின் ஒரு கிளையாகும். (முஸ்லிம்)
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவர் தன் அண்டை வீட்டானை நோவினை செய்யாமலிருக்கட்டும். மேலும் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். மேலும் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவர் நல்லதை பேசட்டும். அல்லது மௌனியாக இருக்கட்டும். (புஹாரி, முஸ்லிம்)
ஈமானின் அடிப்படைகளுக்கு முரணாக நடப்பது, அல்லது அவற்றை மறுப்பது முஃமின் என்ற பட்டியலிலிருந்து வெளியேற்றிவிடும்.
  • நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (4:150,151)
ஈமான் என்பது மனித செயற்பாடுகளோடு சம்பந்தப்பட்டிருப்பதனால் அது கூடவும் குறையவும் முடியும். நல்லமற்களை செய்யும் போது, அல் குர்ஆனை ஓதும்போது, அல்லாஹ்வைப்பற்றி அவன் படைப்பினங்கள் பற்றி சிந்திக்கும் போது அது அதுகரிக்கலாம். பாவங்கள் செய்யும்போதோ அல்லாஹ்வை மறந்திருக்கும்போதோ அது குறையலாம். இப்படி நம்புவதும் ஈமானின் மிகமுக்கிய அம்சமாகும்.
  • அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்)………………. (74:30,31)
  • ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், “இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?” என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது. இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது; அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.    (9:124,125)
  • உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (8:2)
  • அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின் இதயங்களில், அவன்தான் அமைதியும் (ஆறுதலும்) அளித்தான்; அன்றியும் வானங்களிலும் பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கோன்.(48:4)
  • நபிகளாரின் எழுத்தாளர்களுள் ஒருவரான ஹன்ளலா(றழி) அவர்கள் கூறினார்கள்: என்னை சந்தித்த அபூபக்ர்(றழி) அவர்கள் என்னிடம் எப்படி இருக்கின்றீர்?’ என்று கேட்க, நான் ஹன்ளலா முனாபிக் ஆகிவிட்டார்.என்று கூறினேன். அதற்கு அபூபக்ரவர்கள், ‘ஸுப்ஹானல்லாஹ்! நீ என்ன செல்கின்றாய்?’ என்று கேட்க, நாம் அல்லாஹ்வின் தூதரிடம் இருந்து அவர்கள் சுவர்க்கம் நரகத்தைப்பற்றி கூறினால் கண்ணால் பார்ப்பவர்கள் போன்று இருக்கின்றோம். அவர்களிடம் இருந்து வெளியேறி, மனைவி, பிள்ளைகள், பொருட்களோடு கலந்துவிட்டால் அதிகமாகவே மறந்துவிடுகின்றோம்.என்று கூறினேன்.அதற்கு அபூபக்ரவர்கள், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்களும் இதுபொன்ற நிலையை சந்திக்கின்றோம்.என்று கூறினார்கள். பிறகு நாங்கள் இருவரும் நபிகளாரிடம் சென்றோம். நான் நபிகளாரிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! ஹன்ளலா முனாபிக் ஆகிவிட்டார்.என்றேன். அதற்கு நபியவர்கள் அது என்ன?’ என்று கேற்க, நான் நாம் அல்லாஹ்வின் தூதரிடம் இருந்து அவர்கள் சுவர்க்கம் நரகத்தைப்பற்றி கூறினால் கண்ணால் பார்ப்பவர்கள் போன்று இருக்கின்றோம், அவர்களிடம் இருந்து வெளியேறி, மனைவி, பிள்ளைகள், பொருட்களோடு கலந்துவிட்டால் அதிகமாகவே மறந்து விடுகின்றோம்.என்று கூறினேன். அப்போது நபியவர்கள் எனதுயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது சத்தியமாக என்னிடம் இருப்பது போன்றும், சுவர்க்கம் நரகம் கூறப்படும் போது இருப்பது போன்றும் நீங்கள் (எல்லா நிலைகளிலும்) இருப்பீர்களானால் மலக்குமார்கள் உங்களுக்கு படுக்கைகளிலும் பாதைகளிலும் முஸாபஹாச் செய்வார்கள், ஆனாலும் ஹன்ளலாவே (ஈமான் என்பது) நேரத்துக்கு நேரம் இப்படித்தான் இருக்கும்.’ என்று கூறினார்கள்.  (அஹ்மத், முஸ்லிம்)
இப்படி நம்புவதே உண்மை முஃமின்களுக்கு சிறந்ததாகும். இதுவே வெற்றி பெற்ற கூட்டத்தின் அடையாளமுமாகும். மாறாக இஸ்லாத்தில் வழிகெட்ட கூட்டங்களான முர்ஜிஆக்கள், கவாரிஜ்கள் என்போர் ஈமான் என்பது கூடவோ குறையவோ மாட்டாது என்றனர். அதன் காரணமாக முர்ஜிஆக்கள் என்போர், ஒருவன் என்ன பாவம் செய்தாலும் ஈமான் குறையாது.என்று கூறி பாவத்தின் பக்கமும், தௌபா செய்யாமலே காலத்தை கழிப்பதன் பக்கமும் வழிகாட்டினார்கள். இது இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணானதாகும்.
இஸ்லாம் தௌபாவை வைத்திருப்பது குறைந்து போகும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கே.
கவாரிஜ்கள் என்போர் இக்கருத்தைக் கூறியதன் காரணமாக ஒருவன் ஒரு பெரும்பாவத்தை செய்தால் ஈமானே உடைந்து போய்விடும். அதனால் அவன் நிரந்தர நரகை அடைவான் எனக் கூறி அல்லாஹ்வின் மன்னிப்பை மறுத்தனர். இக்கருத்தும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணானதாகும்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்...
ஆக்கம் : அஷ் ஷேக் முர்ஷித் அப்பாசி,
     நாவலப்பிட்டிய,இலங்கை..

Comments