இஸ்லாமிய திருமணம்-2

இஸ்லாமிய திருமணம் தொடர்ச்சி...
திருமண ஒழுங்குகள்:
திருமணத்தை இப்படித் தான் செய்ய வேண்டும்
என்ற ஒழுங்குகளையும் இஸ்லாம் கற்றுத்
தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண
முறை மற்றவர்களின் திருமண
முறையிலிருந்து வித்தியாசமானதாகவும்,
புரட்சிகரமானதகவும், நடைமுறைப்படுத்த
எளிதானதாகவும், சிக்கனமானதாகவும்
அமைந்துள்ளது. அந்த ஒழுங்குகளைப்
பேணி நடத்தும் போது தான் அது இஸ்லாமியத்
திருமணமாக அமையும். அந்த ஒழுங்குகளைக்
காண்போம்.

மணப் பெண் தேர்வு செய்தல்:
மணப் பெண்ணைத் தேர்வு செய்யும்
போது அவள் ஒழுக்கமுடையவளாகவும், நல்ல
குணமுடையவளாகவும்
இருக்கிறாளா என்பதையே கவனிக்க வேண்டும்.
பொருளாதாரத்தையோ, குலப்பெருமையையோ,
உடல் அழகையோ பிரதானமாகக் கருதக்
கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.
மணமகனைத் தேர்வு செய்யும்
போது பெண்களும் ஆண்களின்
நன்னடத்தையையே பிரதானமாகக் கொள்ள
வேண்டும்.
பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும்,
அவர்களின் அழகுக்காகவும், அவர்களின்
பாரம்பர்யத்துக்காகவும் அவர்களின்
நன்னடத்தைக்காகவும் மணந்து கொள்ளப்
படுகின்றனர். நீ நன்னடத்தை உடையவளைத்
தேர்வு செய்து வெற்றியடைந்து கொள் என்று
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி
5090).
பெண் பார்த்தல்:
ஒருவரை ஒருவர் திருமணத்திற்காகவும்
முன்பே பார்த்துக் கொள்வதும் மிகவும்
அவசியமாகும். ஒவ்வொருவரும் தமக்குரிய
வாழ்க்கைத் துணைப் பற்றி பல
எதிர்பார்ப்புகளை மனதில் வைத்திருப்பார்கள்.
அந்த எதிர்ப்பார்ப்புகளுக்கேற்ற வகையில்
தமது வாழ்க்கைத்
துணை அமையாததை திருமணத்திற்குப்
பிறகு அவர்கள் அறிய நேர்ந்தால்
தம்பதியரிடையே நல்லுறவு பாதிக்கப்படலாம்.
அதனால் முன்பே ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொள்ள வேண்டும்.
நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன்
இருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து
அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தான்
மணமுடிக்க விருப்பத்தை கூறினார்கள். அதைக்
கேட்ட நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவளைப்
பார்த்து விட்டாயா? எனக் கேட்டார்கள். அவர்
இல்லை என்றார், நீ சென்று அவளைப் பார்த்துக்
கொள்! அவர்களின் கண்களில் ஒரு பிரச்சினை
உள்ளது என்று கூறினார்கள். (அறிவிப்பவர்:
அபூஹுரைரா(ரலி) நூல்: 2552).
அன்சாரிப் பெண்களின் கண்கள் மற்றவர்களின்
கண்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதைக்
காரணம் காட்டி மனைவியை நிராகரித்து விடக்
கூடாது. முன்னரே மணப் பெண்ணைப் பார்க்க
வேண்டும் என்று முஹம்மது(ஸல்) அவர்கள்
வழிகாட்டுகிறார்கள்.
முகீரா பின் ஷுஹ்பா(ரலி) அவர்கள் ஒரு
பெண்ணை மனம் பேசினார். அவரிடம் நபிகள்
நாயகம்(ஸல்) அவர்கள் அவளைப் பார்த்துக்
கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள்
இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த
ஏற்றதாகும் என்று கூறியதாக முகீரா(ரலி)
அவர்களே அறிவிக்கிறார்கள். (நூல்கள்: திர்மிதி
1007, நசயீ 3183, இப்னுமாஜா 1855 ).
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இந்த
வழிகாட்டுதலை தமிழக முஸ்லிம்கள்
முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றனர்.
திருமணத்துக்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொள்வது பாவச் செயல் எனவும்
கருதுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும்.
பெண் பார்க்கும் நிகழ்ச்சி என்ற பெயரில்
மணமகனின் தாயும், சகோதரிகளும் தான் பெண்
பார்க்கின்றனர். இணைந்து வாழ வேண்டிய
இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும்
உரிமையை இதன் மூலம் மறுக்கின்றனர். பெண்
பார்ப்பதை வலியுறித்தி இன்னும் ஏராளமான
ஹதீஸ்கள் உள்ளன.
பெண்ணின் சம்மதம்:
பெண்ணின் சம்மதம் பெறாமல் திருமணம்
செய்விக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
அவர்களின் சம்மதம் பெறுவது மிகவும்
அவசியமாகும்.
கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும்
சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம்
(ஸல்) கூறியபோது கன்னிப் பெண்(சம்மதம்
தெரிவிக்க) வெட்கபடுவாளே என்று கேட்டேன்,
அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவளது
மௌனமே அவளது சம்மதமாகும் என்று
கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்:
புகாரி 6971,6964,5137).
என் தந்தை எனது சம்மதம் பெறாமல்
மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து இதைக்
கூறிய போது, அத்திருமணத்தை ரத்து
செய்தார்கள்.
(அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம்(ரலி), நூல்:
புகாரி 5139,6945,6969).
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Comments