சகோதரர் PJ அவர்களுக்காக துஆச் செய்யுங்கள்!

சகோதரர் P.ஜைனுல் ஆபிதீனுக்காக பிரார்த்திப்பீர்களாக.... இன்ஷா அல்லாஹ்...


ithawheed.blogspot.com
 
ண்பதுகளின் மத்தியில் தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ விழிப்புணர்வுப் புரட்சிக்கு வித்திட்டவர்களுள், "PJ" என்று அன்புடன் அழைக்கப்படும் சகோ. P. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தலையானவர். இஸ்லாமியப் பேரவை, அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ், ஜம்யிய்த்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா, அனைத்துத் தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய சன்மார்க்க-சமுதாய அமைப்புகளில் பெரும் பங்காற்றியவர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனர். நாவன்மை மிக்க பிரச்சாரகர். அரபு மொழியில் தேர்ந்தவர். மறை விளக்கம், வரலாறு, ஹதீஸ் கலை, ஃபிக்ஹுச் சட்டம் ஆகியவற்றில் ஆய்வுரை வழங்கத்தக்க நம் சமகாலத் தமிழறிஞர்; பன்னூலாசிரியர். அந்நஜாத், அல்ஜன்னத் ஆகிய மாத இதழ்களில் ஆசிரியராக இருந்தபோது, இவர் எழுதிய தலையங்கங்கள் மாற்றுக் கருத்துடையோராலும் விரும்பிப் படிக்கப்பட்டவை.

பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை, அதன் தூய வடிவில் அறிமுகப்படுத்துவதற்காகத் தமிழகமெங்கும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' எனும் உயிரோட்டமான பிரச்சாரம் மேற்கொண்டவர். எல்லாருக்கும் விளங்கும் எளிமையான பேச்சுக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர்.
சகோதரர் PJ அவர்களது அரபு மொழி அறிவு ஆய்வுத்திறன், எழுத்தாற்றல், சொல்லாற்றல், ஷிர்க் மற்றும் பித்-அத்துக்கு எதிரான  முப்பதாண்டுப் போராட்டம், வரதட்சணை எனும் கொடிய நோய்க்கு எதிராக முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வு, மக்களிடம் ஏற்பட்ட சிந்தனை மாற்றம், பிற சமயத்தாருக்கு இஸ்லாமை எளிமையாக அறிமுகப்படுத்தியமை போன்ற அவரது சேவைகள் உலகெங்கும் வாழும் தமிழறிந்த முஸ்லிம்களுக்குத் தேவை.

அன்னாருக்கு மார்பின் வலப்புறத்தில் தோலுக்கடியில் சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டு, அது கேன்ஸர் வகைக் கட்டி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் சிகிச்சையும் தொடங்கப்படவுள்ளது. "பிரார்த்தனையைவிட சக்திமிக்க மருந்தில்லை" என்று உறுதியுடன் நம்புகின்ற நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் "சகோ. PJ அவர்களுடைய நோயை முற்றிலும் நீக்கி, நிறைவான உடல்நலத்தை அவருக்கு வழங்க வேண்டும்" என உளமாரப் பிரார்த்தனைகள் செய்ய வேண்டுமாய் அன்புடன் கோருகிறோம்.

Comments