குர்ஆனின் அமைப்பு


குர்ஆனின் அமைப்பு

திருக் குர்ஆனின் வசனங்களும், அத்தியாங்களும் அருளப் பெற்ற முறைக்குத் 'தர்தீபே நுஜுலி' - அருளப் பெற்ற வரிசை என்று கூறப்பெறுகின்றது.

திருக் குர்ஆனில் உள்ள வசனங்களும், அத்தியாயங்களும் இப்பொழுதுள்ள வரிசைக்கிரமப்படி அருளப் பெறவில்லை. கால நிலைமைக்கும், மக்களின் தேவைக்கும் அவசியமான அளவு சிறிது, சிறிதாக அத்தியாயங்களாகவும், வசனங்களாகவும், அருளப் பெற்று வந்தன. இவ்வாறு அருளப் பெற்று வரும் காலத்தில், நபி பெருமானார் இன்னின்ன வசனங்கள், இன்னின்ன அத்தியாயங்களை சேர்ந்தவையெனவும், அதிலும் குறிப்பிட்ட வசனம், குறிப்பிட்ட அத்தியாயத்தில் எத்தனையாவது வசனம் எனவும் அறிவித்து வந்தார்கள். அந்த ஒழுங்கு முறைப்படி அமைக்கப் பெற்றது.

இந்த அமைப்பு முறைக்கு, 'தௌகீஃபீ' (அறிவிப்புப்படி அமைக்கப் பெற்றது) என்றும், 'தர்தீபே திலாவதி' (ஓதக்கூடிய வரிசை) என்றும், 'தர்தீபே ரஸூலி' (ரஸூலுடைய வரிசை) என்றும் கூறப்பெறுகின்றது.

ஜுஸ்வுகள்

திருக் குர்ஆனிலுள்ள வசனங்கள் யாவையும் ஏறத்தாழ சமமான முப்பது 'ஜுஸ்வு' (பாகங்)களாகப் பிரிக்கப் பெற்றுள்ளது.

ஒவ்வொரு பாகத்திற்கும், அந்தந்தப் பாகத்தின் முக்கிய சொற்களையே பெயராகக் கூறப்பெறுகின்றது.  'அல்ஹம்து' என்னும் முதல் அத்தியாயம், திருக் குர்ஆனிலுள்ள 30 பாகங்களுக்குமே ஒரு முன்னுரையைப் போன்று அமைந்துள்ளது.

திருக்குர்ஆன் சிறிய, பெரிய 114 அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

ருகூவுகள்

திருக் குர்ஆனின் பிற்பகுதியில் உள்ள 35 அத்தியாயங்களைத் தவிர, மற்ற அத்தியாயங்களை- தொழுகையின் சாதாரண ஒரு ரகஅத்தில் ஓதக்கூடிய ஒரு அளவில் - பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கு 'ருகூவு' ஒரு 'ரகஅத்'தில் ஓதக் கூடியது என்று பெயர். இந்தப் பிரிவைக் குறிக்க ஆங்காங்கே 'அய்ன்' அடையாளமிடப்பட்டிருக்கிறது.

மக்கீ - மதனீ

திருக் குர்ஆன் அருளப் பெற்று 23 ஆண்டுகளில், பெருமானார் அவர்கள், முதல்பத்தாண்டுகளில் மக்காவிலும், பிந்திய பதிமூன்று ஆண்டுகள் மதீனாவிலும் வாழ்ந்திருந்தார்கள்.

அவர்கள் மக்காவில் வாழ்ந்திருந்த 10 ஆண்டு காலத்தில் மக்காவிலும், அதையடுத்;த மற்றைய இடங்களிலும் அருளப் பெற்ற அத்தியாயங்களுக்கு 'மக்கீ' (மக்காவில் அருளப் பெற்றவை) என்றும், அவர்கள் மதீனாவில் வாழ்ந்த 13-ஆண்டு காலத்தில் மதீனாவிலும், அதையடுத்த மற்ற இடங்களிலும் அருளப் பெற்ற அத்தியாயங்களுக்கு 'மதனீ' (மதீனாவில் அருளப் பெற்றவை) என்று பெரும்பாலனவர்களின் கூற்று.

திருக் குர்ஆனில் உள்ள மொத்த அத்தியாயங்களில் 86 'மக்கீ' அத்தியாயங்களும், 28 'மதனீ' அத்தியாயங்களும் இருக்கின்றன. இவ்வாறு பொதுவே அத்தியாயங்களை 'மக்கீ' 'மதனீ' என்று பிரித்து குறிப்பிட்ட போதிலும், 'மக்கீ' அத்தியாயங்கள் சிலவற்றில், 'மதனீ' வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறே 'மதனீ' அத்தியாயங்கள் சிலவற்றில் 'மக்கீ' வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

ஸஜ்தா திலாவத்

திருக் குர்ஆனில் சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும்போதோ, அல்லது ஓதக் கேட்கும் போதோ, ஸஜ்தா செய்ய வேண்டும். இவ்வாறு சிரம் பணிய வேண்டிய வசனங்கள் 14 இருக்கின்றன.

 திருக்குர்ஆனில் சில செய்திகள் திரும்பத் திரும்ப கூறப்படுவதை; காணலாம்.

http://www.kayalpatnam.in/ இருந்து....

Comments